வெள்ளி, 27 ஜூன், 2014

மழைநீரை சேமிப்போம்-தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு. .

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.
        தேசிய குடிநீர் விழிப்புணர்வு இயக்கம் - தமிழ்நாடு. வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி. 
                                        


மழை கொடுக்கும் வானத்தை   திருவள்ளுவரே சிறப்பித்து கூறியுள்ளார்.என்றால் மழைநீரின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் அல்லவா? இதோ வான் சிறப்பு.....

11. வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. 
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வை கெடுக்கக்கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் கூட முளைக்காது.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால் தான் கடல் கூட வற்றாமல் இருக்கும்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 
      வானமே பொய்த்து விடும் போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். 
    இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 
         உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
குறள் வரிசைப்படி:
11 ஆம்குறளில்,

                     மழை இருப்பதால் உலகமும் உலக உயிர்களும் தொடர்ச்சி கொள்வதால் அது சாவா மருந்தென உணரப்படவேண்டும் எனவும
12 ஆம்குறளில்,

                          மழை உணவுப் பொருள்களை வழங்கி தானும் உணவாகப் (நீர் வேட்கை தணிய) பயன்படுகிறது எனவும்
13 ஆம்குறளில், 

                          வான் பொய்த்தால் அகன்ற இவ்வுலகம் பசியால் வருந்தும் எனவும்
14 ஆம்குறளில், 

                        அடித்துப் பெய்யாமல் மழை குன்றிவிட்டால் உழவர்கள் ஏர் பூட்டமுடியாது எனவும்
15 ஆம்குறளில், 

                 பெய்து கெடுத்தும் பெய்யாமல் கெடுத்தும் பின்னர் அதுவே பெய்து கைதூக்கிவிடுவதும் மழையின் தன்மைகள் எனவும்
16 ஆம்குறளில், 

                     மழைத்துளி வீழாவிட்டால் புல்லின் நுனிகூட தோன்றாது எனவும்
17 ஆம்குறளில், 

           இடிஇடித்து மின்னலடித்து பெருமழை இல்லையென்றால், பெருங்கடலும் தன் வளம் குறையும் எனவும்
18 ஆம்குறளில், 

                 மேகம் வழங்காவிட்டால் விழாக்களும் பூசையும் வானிலுள்ள தேவர்களுக்கு இல்லை எனவும்
19 ஆம்குறளில், 

           வானம் தவறினால் தானமும் தவமும் மறைந்து விடும் எனவும்
20 ஆவதுகுறளில், 

            நீர் இல்லாமல் இவ்வுலகு இல்லை; மழை அற்றுப்போனால் எப்பேர்ப்பட்டவரும் ஒழுக்கநிலை குன்றுவர் எனவும் 
                     
       தெய்வப்புலவர் வள்ளுவப்பெருந்தகையார் அவர்கள்   சூரியன் போன்று முக்கியமான இயற்கை வளங்கள்  இருக்க,அதனடிப்படையில் கிடைக்கும்  மழையைப் பற்றி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  வலியுறுத்திக் கூறியிருப்பதிலிருந்து மழைநீரின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து அதன்படி மழைநீரை சேமிப்போம்.மற்றவர்களுக்கும் எடுத்துரைப்போம்..

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக